சசிகலா கணவர் நடராஜன் சென்னையில் இன்று காலமானார்

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சசிகலா கணவர் நடராஜன் இன்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு ஏற்கனவே சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது. இதனால், கடந்த ஆண்டு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒரு மாத கால ஓய்வுக்கு பிறகு நடராஜன் வீடு திரும்பினார்.

இந்நிலையில், நடராஜனுக்கு கடந்த 17ம் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் நடராஜனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து, நேற்று நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இன்று நள்ளிரவு 1.35 மணியளவில் நடராஜன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இதுகுறித்து சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு இன்று பரோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், மறைந்த நடராஜனின் உடல் காலை 7 மணி முதல் 11 மணி வரை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம், விளார் கிராமத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்குகள் நடத்தப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>