விஐபிக்களை வீழ்த்த ஸ்வப்னா கொடுத்த சூப்பர் பரிசு என்ன தெரியுமா?

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் விஐபிகளை வீழ்த்த கிலோவுக்கு ₹2,000 விலையுள்ள பேரீச்சம்பழத்தைப் பெட்டி பெட்டியாகக் கொடுத்தது தெரிய வந்துள்ளது.திருவனந்தபுரம் தூதரகம் வழியாகத் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் உள்பட விஐபிகளை வீழ்த்தி காரியம் சாதிப்பதில் பலே கில்லாடியாக இருந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இவர் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் பணிபுரிந்தபோது அசைக்க முடியாத மிகச் செல்வாக்கு உள்ளவராகத் திகழ்ந்து வந்தார். இவரைக் கேட்காமல் தூதரகத்தில் யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை இருந்தது. தூதரகத்தில் மட்டுமில்லாமல் கேரள அரசில் அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் இடையேயும் இவருக்கு பெரும் செல்வாக்கு இருந்தது.

பல முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட அதிகாரிகளையும் தனது கைக்குள் வைத்திருந்தார். இவர்கள் துபாய் உள்பட ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்குச் சென்றால் அங்கு அவர்களுக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் இவர் கவனித்துக் கொள்வார். இதனால் இவர் என்ன கோரிக்கையை முன்வைத்தாலும் அதிகாரிகள் செய்ய ரெடியாக இருந்தனர். தங்கக் கடத்தல் மோசடி மட்டுமில்லாமல் அரசின் பல திட்டங்களிலும் இவர் கமிஷன் பெற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள் உட்பட முக்கிய அதிகாரிகளை ஸ்வப்னா எப்படி வீழ்த்தினார் எனத் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே துபாயில் இருந்து கடந்த 3 வருடங்களுக்கு முன் பள்ளி மாணவர்களுக்காக என்று கூறி 17 ஆயிரம் கிலோ பேரீச்சம்பழம் கொண்டுவரப்பட்டது. இவை கொண்டுவரப்பட்ட பார்சல்களிலும் தங்கம் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் உள்பட விஐபிகளை வீழ்த்துவதற்காக ஸ்வப்னா சுரேஷ் மிக உயர்ரக பேரீச்சம் பழத்தைக் கொடுத்து வந்துள்ளார். இதற்குக் கிலோ 2000 ரூபாய்க்கு மேல் இருக்கும். பெட்டி பெட்டியாக இதுபோன்ற உயர்ரக பேரீச்சம்பழத்தைக் கொடுத்துத் தான் விஐபிகளை இவர் தனது வலைக்குள் சிக்க வைத்துள்ளார் என என்ஐஏவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

More News >>