திருச்சியில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கைதானவர் கூறியதால் பரபரப்பு..

திருச்சியில் இளம் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டவர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி கோ அபிசேகபுரம் அருகே உள்ள புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த 17ம் தேதி இரவில் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர் தன்னை போலீஸ் என்று கூறி அந்த இளம்பெண்ணை மிரட்டி அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் அவரது நண்பர்கள் 3 பேரை அங்கு வரவழைத்தார். அவர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணைப் பலாத்காரம் செய்துள்ளனர்.மறுநாள் காலை அவரை புத்தூர் அரசு பொது மருத்துவமனை அருகே இறக்கிவிட்டு அந்த நபர் சென்று விட்டார். ரத்தம் சொட்டச் சொட்ட நின்றுகொண்டிருந்த அந்த இளம்பெண்ணைப் பார்த்த அப்பகுதியினர் உடனடியாக போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்று அந்த இளம்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் விசாரித்த போது தன்னை நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்ததாகக் கூறினார்.

இதையடுத்து உறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் திருச்சி புத்தூர் கீழ் வண்ணார்பேட்டை சேர்ந்த முஸ்தபா (42) மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த சிவா (23) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்போது, தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக முஸ்தபா போலீசாரிடம் கூறினார். இதில் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அவரை திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று எச்ஐவி பரிசோதனை நடத்தினர்.

ஆனால் பரிசோதனையில் எச்ஐவி இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காகவே அவர் எச்ஐவி நாடகமாடினார் எனத் தெரியவந்தது. இதையடுத்து விசாரணைக்குப் பின் முஸ்தபா மற்றும் சிவா இருவரையும் போலீசார் திருச்சி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே பலாத்கார சம்பவத்தில் காயமடைந்த இளம்பெண்ணுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

More News >>