எஸ்.பி. பி உடல்நிலை பற்றி பிரபல நடிகர்கள் தகவல்..

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென்று ஆகஸ்ட் 14ம் தேதி உடல்நிலை கவலைக்கிடமானது. உடனடியாக அவர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு உயிர்காக்கும் கருவிகளான வென்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பி.பி குணம் அடைவதற்காக திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். மருத்துவமனை டாக்டர்களும் வெளி நாட்டு டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை அளித்தனர். அது பலன் அளித்தது, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது பற்றி மருத்துவமனையும். எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் அறிக்கை மூலம் தெரிவித்து வந்தனர். எஸ்பிபி ஐபேட்டில் கிரிக்கெட் டென்னிஸ் பார்க்கிறார், எழுதிக் காட்டி தனது தேவைகளைத் தெரிவிக்கிறார். பிசியோ தெரபி சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தருகிறார். மருத்துவர்களின் உதவியுடன் படுக்கையிலிருந்து எழுந்து 20 நிமிடம் வரை அமர்ந்திருக்கிறார். உணவு சாப்பிடுகிறார் என பல்வேறு மகிழ்ச்சியான விஷயங்களைச் சரண் தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு வென்ட்டிலேட்டரில் தான் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது என்ற கவலையான தகவலும் தெரிவித்தார்.

நுரையீரல் நன்கு குணம் ஆகி வந்த நிலையில் நேற்று முதல் அது சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என மருத்துவமனை நேற்று மாலை ஒரு அதிர்ச்சியான அறிக்கை வெளியிடப்பட்டது. இதனால் திரையுலகினர், குடும்பத்தினர், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவலை அறிந்து நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு மருத்துவமனைக்கு விரைந்து சென்று எஸ்பிபியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். டாக்டர்களிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தறிந்தார்.பின்னர் அவர் வெளியில் வந்து மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, எஸ்பிபி நலமாக இல்லை. உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார்.

இந்தி நடிகர் சல்மான்கான் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில், பாலசுப்ரமணியம் அனைத்து வலிமையும், நம்பிக்கையுடனும் பூரண உடல் நலம் பெற வேண்டும். எனது இதயப் பூர்வமான வாழ்த்துக்கள். எனக்காக நீங்கள் பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி.. லவ் யூ சார் என தெரிவித்திருக்கிறார்.

More News >>