என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான்! போய் வா தம்பி எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு சிவகுமார், கமல் திரையுலகினர் இரங்கல்..

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவரது உடல் நிலை கவலைக்கிடமானது, டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர். அவரது உடல் நிலை தேறிவந்த நிலையில் நேற்று உடல் நிலை கவலைக்கிடமானது. வென்டிலேட்டர் சிகிச்சைக்கும் அவரது நுரையீரல் ஒத்துழைப்பு தரவில்லை. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் வெவ்வேறு சிகிச்சை முறைகளைக் கையாண்டனர்.

இன்று காலைவரை அவரது உயிரை மீட்க இறுதிக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.04 மணி அளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்பிபியின் நெருங்கிய நண்பரும். நடிகருமான கமல்ஹாசன் நேற்று இரவே மருத்துவமனை சென்று எஸ்பிபி உடல்நிலை பற்றி விசாரித்தார். அப்போதே எஸ்பிபி உடல்நிலை நலமாக இல்லை என்று அவர் உயிரை காப்பாற்றுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

எஸ்பி.பாலசுப்ரமணியம் இன்று இறந்த தகவல் அறிந்து டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அன்னைய்யா எஸ்.பி.பி அவர்களின் குரலின் நிழல் பதிப்பாகப் பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் இவ்வாறு கமல் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

சிவகுமார்:அரை நூற்றாண்டுக்கும் மேலாக எத்தனை ஆயிரம் பாடல்களை எத்தனை மொழிகளில் பாடிய உன்னதக் கலைஞன் ! மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன் ! இமயத்தின் உச்சம் தொட்டும் பணிவின் வடிவமாகப் பண்பின் சிகரமாக இறுதி உரையிலும் வெளிப்படுத்தியவன்... இதுவரை மக்களுக்குப் பாடியது போதும் இனி என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான்! போய் வா தம்பி. இசை அமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு பேரழிவு என ஏ.ஆர்.ரகுமான்.

நடிகர் விஷால் கூறும்போது: எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. மெல்லிசை குரலின் சகாப்தம் முடிந்தது. இருப்பினும் அவரது பாடல்கள் என்றும் நம் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும்.

நடிகர் ஆர்யா கூறியது:எஸ்.பி.பி காலமான செய்தி கேட்டு மனமுடைந்தேன். உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவோம் சார். நீங்கள் தந்த இசைக்கும், நினைவுகளுக்கும் நன்றி.

இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் கூறியது:பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு மெய் நிகர் இசை நிகழ்ச்சியின் போது நான் அவருடன் உரையாடினேன். அவர் மிகவும் அன்பானவர். வாழ்க்கை உண்மையிலேயே கணிக்க முடியாதது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More News >>