எஸ்பி.பாலசுப்பிரமணியம் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது.. கவர்னர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்..

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். 51 நாட்கள் சிகிச்சையில் மெல்லக் குணம் அடைந்து வந்தவர் இன்று மதியம் காலமானார்.

அவரது மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறியதாவது: இனிமையான இணையற்ற குரல் வல்லமை கொண்ட எஸ்பி. பலசுப்பிரமணியம் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. மிக அதிகமான பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்து புகழின் உச்சிக்கே சென்ற அவரின் மறைவு திரைத்துறைக்கும், கலை உலகிற்கும் எனக்கும் ஈடுசெய்ய முடியா பேரிழப்பு.ஐந்து தலைமுறைகள் தாண்டி, அரை நூற்றாண்டிற்கும் மேலாகக் கோடிக் கணக்கான நெஞ்சங்களைத் தனது காந்தக் குரலால் கட்டிப்போட்ட பன்முக ஆளுமை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது மறைவு திரைத்துறைக்கும், இசையுலகிற்கும் ஈடில்லா பேரிழப்பு!

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களை இழந்து மிகுந்த துயருற்றிருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழக கவர்னர் தனது இரங்கல் செய்தியில், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும், உலகளவில் இசை ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. மென்மையான குரலாலும், இசையாலும் என்றும் எங்களுடன் வாழ்வீர்கள் எனக் கூறி உள்ளார்.

More News >>