போன ஜென்ம சகோதரர் எஸ் பி பி.. கே.ஜே. யேசுதாஸ் உருக்கம்..

பாடகர் எஸ்.பி.பியும், கே ஜே ஜேசுதாஸும் உயிர் நண்பர்கள். எஸ் பி பி மறைவு குறித்து ஜேசுதாஸ் கூறியதாவது :என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் பாலு என்னுடைய உடன்பிறந்தவர் போன்றவர். பாலு என்னை இவ்வளவு நேசித்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அண்ணா என்று கூப்பிடும் பொழுது ஒரு அம்மா வயிற்றில் பிறக்கவில்லை ஆனால் ஒரு கூட பிறந்தவர் போலப் பழகியவர். முன் ஜென்மத்தில் நானும் எஸ் பி பி அவர்களும் சகோதரர்களாக இருந்திருக்கலாம்.

பாலு முறையாகச் சங்கீதம் கற்கவில்லை என்றாலும் அவருடைய சங்கீத ஞானம் பெரிய அளவில் இருக்கும். பாட்டுப் பாடவும் செய்வார், உருவாக்கவும் செய்வார். சங்கராபரணம் என்ற படத்தில் முறையாகச் சங்கீதம் கற்றவருக்கு இணையாகப் பாடியிருப்பார் அதைக் கேட்டால் யாரும் இவர் சங்கீதம் கற்கவில்லை என கூறமாட்டார்கள். இரண்டு பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். சிகரம் படத்தில் பாடிய அகரம் இப்போ சிகரம் ஆச்சு என்ற பாடல் பாலு எனக்குப் பரிசாகப் பாடினேன் என்று கூறினார். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. யாரையும் புண்படுத்தமாட்டார். கூட இருக்கும் எல்லோரையும் அன்பாகவும் ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார்.

பாரிஸில் நாங்கள் தங்கிய போது சாப்பாடு கிடைக்கவில்லை, அப்பொழுது பாலு ரூம் சர்வீஸ் எனக் குரல் மாற்றிக் கிண்டல் செய்தார் பின்பு அனைவர்க்கும் அவரே சமைத்துப் பகிர்ந்தார். அவ்வளவு பசியில் அந்த சாப்பாடு ருசியாக இருந்தது. எல்லோரும் வயிறார சாப்பிட்டோம். நாங்கள் கடைசியாகப் பாடியது ஒரு சிங்கப்பூர் ப்ரோக்ராம்மில் தான். பாலு நோய் குணமாகி எப்போது வீடு திரும்புவார் என நான் அமெரிக்காவில் காத்துக்கொண்டிருந்தேன் இந்த COVID ஆல் நமக்கு ஒரு பெரிய இழப்பு நடந்துள்ளது. நான் US ல் இருந்து இங்கே வர அனுமதி இல்லை. என்னால் அவரை பார்க்க முடியவில்லை என ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், Stage -ல் பாலுவும் நானும் ஒரு ஓரமாகச் சிரித்துக் கொண்டிருப்போம் அப்படிப் பார்த்துவிட்டு, அசையாமல் இருக்கும் பாலுவைப் பார்க்க என் மனம் தாங்காது. என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்.

இவ்வாறு கே.ஜே. யேசுதாஸ் கூறினார்கள்.

More News >>