வாழ்க்கையை முடிக்க துடித்த வயதான தம்பதி ஸ்ரீ ரங்கம் ஆற்றில் நடந்த பரபரப்பு சம்பவம்...!

பெற்ற மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீரங்கம் ஆற்றில் வயதான தம்பதியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் நேற்று முன்தினம் ஒரு வயதான தம்பதியினர் வந்தனர். அவர்கள் படித்துறையில் நின்றவாறு காவிரித்தாயை இருவரும் வணங்கினர். பின்னர், மூதாட்டி தான் அணிந்திருந்த தாலிச்சங்கிலி மற்றும் தங்கக் கம்மல், வளையல்கள் உள்ளிட்ட நகைகளைக் கழற்றி அங்கிருந்த உண்டியலில் போட்டார்.

அதைப்பார்த்த சிலர், ஏதோ வேண்டுதலாக இருக்கும் என்று எண்ணினர். பின்னர் இருவரும், அம்மண்டபம் படித்துறையில் இறங்கிக் கைகோர்த்தவாறு காவிரி ஆற்றில் இறங்கினர்.அப்போதும், இருவரும் காவிரியில் குளிக்கச் செல்வதாக அங்கிருந்தவர்கள் நினைத்தனர். ஆற்றின் ஆழமான பகுதிக்குச் செல்ல முடியாமல் இருவரும் நீரில் மூழ்குவதும், எழுவதுமாக இருந்தனர். நீண்ட நேரமாகியும் இதே நிலை நீடித்ததால், இருவரும் தற்கொலை எண்ணத்துடன் காவிரியில் இறங்கியது தெரியவந்தது.

இதைக்கண்ட மண்டபத்தில் நின்றிருந்த ஊழியர்கள் சிலர், ஆற்றில் இறங்கி இருவரையும் கைத்தாங்கலாக வெளியே அழைத்து வந்தனர். முதலில் வெளியே வரமறுத்த அவர்களிடம் நைசாக பேசி வெளியே அழைத்து வந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் காவல்துறை உதவி ஆய்வாளர் தயாளன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து தம்பதியினரிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் , கோவையை அடுத்த துடியலூரை சேர்ந்த வெங்கடேசன், இந்திராணி தம்பதியர் என்பது தெரிந்தது. அவர்களிடம் தற்கொலை முயற்சி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் . அதற்கு அவர்கள் எங்களுக்கு 2 மகள்கள். ஆண் வாரிசு கிடையாது. அவர்களை வளர்த்து படிக்க வைத்து . நல்ல இடத்தில் இருவருக்கும் திருமணமும் செய்து கொடுத்தோம். தனியாக வசித்த எங்களுக்கு வயதாகி விட்டதால், கோவையில் உள்ள சின்ன மகள் வீட்டில் வசித்தோம். அங்கு மகளுடன் சிறு, சிறு மனக்கசப்பு ஏற்பட்டது. அது எங்களுக்கு மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

எனவே, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை இறுதியாக தரிசித்து விட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என பஸ்சில் ஏறி திருச்சிக்கு வந்தோம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்து விட்டு, அம்மண்டபம் படித்துறைக்கு வந்து காவிரி ஆற்றில் மூழ்கி உயிரை மாய்த்துக்கொள்ள ஆற்றில் இறங்கினோம் என்று அந்த தம்பதியினர் கூறினர்.இந்த சம்பவம் அம்மண்டபத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. போலீசார் வயதான தம்பதியினரை மீட்டு, திருச்சியில் உள்ள தனியார் ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். மேலும் கோவையில் உள்ள மகளுக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

More News >>