சமூக வலைத்தளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

யூடியூப் உள்பட சமூக இணையங்களில் பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை பரப்பி வந்தவரின் வீட்டுக்கு சென்று பெண்கள் அமைப்பினர் கழிவு ஆயிலை உடலில் ஊற்றி மன்னிப்பு கேட்க வைத்தசம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் விஜய் பி. நாயர். இவர் ஒரு யூடியூப் சேனலை நடத்திவருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக தனது யூடியூப் சேனல் மூலம் பெண்கள் குறித்து ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார். குறிப்பாக மலையாள சினிமாவில் பணிபுரிந்து வரும் ஒரு பெண் டப்பிங் கலைஞர், சபரிமலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்திய ரெஹனா பாத்திமா, திருப்தி தேசாய், பிந்து அம்மிணி, கனகதுர்கா உள்பட பல பிரபல பெண்களுக்கு எதிராகவும் ஆபாசமாக கருத்துக்களை தெரிவித்து வந்தார். பெமினிஸ்ட்டுகள் அனைவரும் மிக மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கு பாலுணர்ச்சி மிக அதிகம் என்றும் இவர் கூறி வந்துள்ளார்.

செயற்பாட்டாளர்கள் என்று கூறும் சில பெண்கள் ஒரு நாளைக்கு பத்து முறையாவது ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என்ற தொனியிலும் இவர் யூடியூபில் பேசி வந்துள்ளார். யூடியூபில் இவரது வீடியோக்களை இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்று பிரபல மலையாள சினிமா டப்பிங் கலைஞரான பாக்யலட்சுமியின் தலைமையில் 3 பெண்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விஜய் பி. நாயரின் வீட்டுக்கு சென்றனர்.அவர் கதவை திறந்தவுடன் பாக்யலட்சுமி தலைமையிலான பெண்கள் அமைப்பினர் அவரது முகத்திலும் உடலிலும் கழிவு ஆயிலை ஊற்றினர். இதில் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த அவர்கள், யூடியூபில் பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினர். பெண்கள் அமைப்பினரின் மிரட்டலுக்கு பயந்த விஜய், அவர்கள் முன்னிலையில் இனி யூடியூபில் பெண்களுக்கு எதிராக எந்த கருத்துக்களை வெளியிட மாட்டேன் என்று கூறி மன்னிப்பும் கேட்டார். மேலும் அவரை கட்டாயப்படுத்தி அங்கு வைத்தே யூடியூபில் அவர் வெளியிட்ட அனைத்து வீடியோக்களையும் நீக்கவும் செய்தனர். இந்த காட்சிகளை பாக்யலட்சுமியுடன் சென்ற ஒருவர் நேரலையாக பேஸ்புக்கில் ஒளிபரப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More News >>