கேரளா தங்க கடத்தல் விவகாரம்.. சொத்து விபரம் கேட்டு பினீஷ் கோடியேரிக்கு அமலக்கப்பிரிவு நோட்டீஸ்..

சொத்து விபரங்களை தாக்கல் செய்ய கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில பொது செயலாளர் கோடியேரி பால சிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரிக்கு அமலக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில், கேரள மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கோடியேரியிடம் நேற்று மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தினர். கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் 2வது மகன் பினீஷ் கோடியேரி. இவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் பெங்களூரு, சென்னை உட்பட பல இடங்களில் நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். கேரளாவில் பிரபலமாக பேசப்படும் குற்றச்சம்பவங்களில் பினீஷ் கோடியேரி பெயரும் அடிபடுவது உண்டு. சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டது.

இதில் கன்னட டிவி நடிகை அனிகா, கேரளாவை சேர்ந்த முகமது அனூப், பாலக்காட்டை சேர்ந்த ராமச்சந்திரன் என 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முகமது அனுபுக்கும், பினீஷ் கோடியேரிக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதற்கிடையே திருவனந்தபுரம் தங்கக்கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சொப்னாவின் வங்கி லாக்கரில் சோதனை நடத்தியபோது, ஒரு கிலோவுக்கும் மேல் நகைகள் மற்றும் ஒருகோடிக்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தின.

கேரளாவில் லைப் மிஷன் என்ற பெயரில் ஏழைகளுக்கு வீடுகட்டி கொடுக்கும் திட்டத்தின் கீழ், வடக்கான்சேரி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக துபாயை சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ20 கோடி அன்பளிப்பாக கொடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை கேரளாவை சேர்ந்த ஒரு நிறுவனம் எடுத்திருந்தது. இந்த நிறுவனம் தந்த கமிஷன் தொகையைத்தான் லாக்கரில் வைத்திருந்ததாக சொப்னா கூறியிருந்தார். மேலும், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் விசா ஸ்டாம்பிங் செய்யும் பணியை குத்தகை எடுத்த சில நிறுவனங்களும் தனக்கு கமிஷன்கொடுத்ததாக கூறினார்.

இதில் ஒரு நிறுவனத்தில் பினீஷ் கோடியேரிக்கும் முதலீடு இருப்பதாக அமலாக்கபிரிவுக்கு தெரிந்தது. இது குறித்து விசாரணைக்கு, ஆஜராகும்படி, அமலாக்கபிரிவு நோட்டீஸ் அனுப்பியது. கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து பினீஷின் வங்கி கணக்குகள் தொடர்பான விபரங்களை அளிக்க அனைத்து வங்கிகளுக்கும் அமலாக்க இயக்குனரகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டது.. இந்த நிலையில் சொத்து குறித்தான விபரங்களை தாக்கல் செய்ய அமலாக்க இயக்குனரகம் பினீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் அமலாக்க துறை அனுமதி இல்லாமல் எந்த சொத்துக்களையும் விற்பனை செய்யக் கூட து என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. சட்ட விரோத செயல் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் பினீஷ் கோடியேரி விரைவில் கைது செய்யப்படலாம் என்று அமலாக்க இயக்குனரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More News >>