நகையை தொலைத்தவன் வாழ்வையும் தொலைத்தான் . கரூர் அருகே பிளஸ் டூ மாணவன் சோக முடிவு..!

ஒன்றரை பவுன் கை சங்கிலியைத் தொலைத்த பிளஸ் டூ மாணவன் வீட்டிற்குப் பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம், க.பரமத்திகுளம் நகரைச் சேர்ந்தவர் பூபதி.இவரது மகன் தீபக் ( 18). இவர், அரசுப் பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர், தனது கையில் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி (பிரேஸ்லெட்) அணிந்திருந்தார். நேற்று தனது நண்பர்களுடன் வெளியில் சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த பிரேஸ்லெட் தொலைத்து விட்டது.

பல்வேறு இடங்களில் தீபக் தேடிப்பார்த்தும் நகை கிடைக்கவில்லை. இதனால் வீட்டில் பெற்றோர் திட்டுவார்களே என்று பயந்த தீபக், அங்குள்ள உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அப் பகுதி மக்கள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், க.பரமத்தி போலீசாரும், அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தீபக் உடலை மீட்டனர்.

பின்னர் தீபக்கின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. க.பரமத்தி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்க கை சங்கிலி தொலைந்ததால் இந்த விபரீத முடிவை மாணவன் தீபக் எடுத்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

More News >>