ராஜஸ்தானின் தொடர் வெற்றிக்கு, கொல்கத்தா முற்றுப்புள்ளி வைக்குமா?

ஐபிஎல் லீக் சுற்றின் இன்றைய ( 30-09-2020) போட்டி துபாயில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இமாலய வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளும் ஷார்ஜாவில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. ஷார்ஜா ஆடுகளும் மற்ற ஆடுகளங்களை விட சிறியது என்றாலும் முதல் போட்டியில் சென்னைக்கு எதிராக 216 ரன்கள் அடித்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 223 என்ற இமாலய இலக்கை நிர்ணயிக்க அதையும் சேஸ் செய்து, IPL வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்த அணியாக வலம் வருகிறது ராஜஸ்தான் அணி.கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை இரண்டு போட்டிகளில் விளையாடி, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வென்றுள்ளது.இன்றைய போட்டியானது துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளதால் இரு அணிகளும் தங்களின் திட்டங்களை ஆடுகளத்திற்கு ஏற்றவாறு மாற்றவேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

RR vs KKR opening pair

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரைத் தொடக்க ஆட்டக்காரர்களான பட்லர் மற்றும் சுமித் இருவரும் அபாரமான பார்மில் உள்ளனர்.கொல்கத்தா அணியைப் பொறுத்தவரைத் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கும் கில் மற்றும் நரைன் இருவரும் இன்னும் தங்களின் திறமையை நிரூபிக்காதது அணிக்கு ஒரு பின்னடைவாக இருக்கும். கடந்த போட்டியிலாவது கில் தனது அதிரடியைக் காட்டினார். ஆனால், நரைன் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலுமே இன்னும் சோபிக்காதது அவரின் பொடன்ஷியலை கேள்விக்குறியாக்கி உள்ளது. கொல்கத்தா கேப்டன் தினேஷ் வேண்டுமானால் அவரின் பேட்டிங் இடத்தை மாற்றிப் பார்க்கலாம். ஆனால் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களைப் பலமுறை அவுட் ஆக்கி உள்ளார் நரைன். அதனால் அவர் பந்து வீச்சில் நெருக்கடி தர வாய்ப்புண்டு.

KKR vs RR Middle order

இரு அணிகளின் மிடில் ஆர்டர்களை பொறுத்தவரைக் கொல்கத்தா அணி வலுவாக உள்ளது. தினேஷ் கார்த்திக் , ராணா மற்றும் மோர்கன் போன்றோர் ராஜஸ்தான் அணிக்குச் சவாலாக இருப்பார்கள்.ஆனால் கேப்டன் தினேஷ் இந்த சீசனின் இரண்டு போட்டியிலும் சுழல் பந்தில் அவுட் ஆகியுள்ளார். இவர் கூக்ளி பந்தில் பலமுறை அவுட் ஆகி உள்ளார்.எனவே ராஜஸ்தான் அணி ஷ்ரேயாஸ் கோபாலைப் பயன்படுத்த வாய்ப்புண்டு .

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை சஞ்சு சாம்சன் தவிர ராபின் உத்தப்பா மற்றும் ரியான் பராக் இருவருக்குமான வாய்ப்பு கிடைக்காததால் சோபிக்கவில்லை. அந்த குறையை இந்த போட்டியில் நிவர்த்தி செய்வார்களா ? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

RR vs KKR All Rounder

ராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் பொறுத்தவரைக் கடந்த போட்டியில் காட்ரல் ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய ராஜஸ்தான் அணியின் திவேதியாவையும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் ஷ்ரேயாஸ் கோபால் இன்றைய போட்டியில் பயன்படுத்த வாய்ப்புண்டு.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ஆண்ட்ரூ ரஸுல் மட்டுமே ஆல்ரவுண்டர் வேலை செய்ய வேண்டும். ஆனால் இவரும் இரண்டு போட்டிகளிலும் பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை இது எதிரணிக்கு சாதகமான தகவல்.

பெரிய ஆடுகளம் என்பதால் ராஜஸ்தான் அணி பந்து வீச்சாளர்களுக்கு புது திட்டங்களை வகுக்க வேண்டும். ஆனால் கொல்கத்தா ஏற்கனவே இரண்டு போட்டிகளையும் பெரிய ஆடுகளத்தில் விளையாடியதால் அவர்களின் பலம் மேலும் அதிகரிக்கும். கொல்கத்தா அணியில் ஷிவம் மாவி , கமலேஷ் நாகர் கோட்டி போன்ற இளம் வீரர்கள் மற்றும் பேட் கம்மின்ஸ் போன்ற அனுபவசாலிகளின் பந்து வீச்சு பலம்.சுழல் பந்து வீச்சைப் பொறுத்தவரை குல்தீப் யாதவ் சோபிக்காத பட்சத்தில் இந்த போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்புண்டு. அந்த இடத்தை வருண் சக்கரவர்த்தி பூர்த்தி செய்வார்.

ராஜஸ்தான் அணியில் அதிவேகமாகப் பந்து வீசும் ஆர்சர் எதிரணியை மிரட்டுவார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஜெய்தேவ் உனட்கட் கடந்த போட்டியில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. அந்த குறையை இந்த போட்டியில் சரிசெய்வார்.இரு அணிகளுமே பலமாக உள்ளது. எனவே நிதானமான ஆட்டத்தை முன்னெடுக்கும் அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.

More News >>