பெண்களை பலாத்காரம் செய்பவர்களை நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும் நடிகை மதுபாலா ஆவேசம்.

சிறுமிகள், இளம் பெண்களை பலாத்காரம் செய்பவர்களை நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும் என்றும், அதை டிவியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் நடிகை மதுபாலா ஆவேசத்துடன் கூறியுள்ளார்.டெல்லி, உத்திரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுமிகள் உட்பட பெண்கள் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பலாத்காரம் செய்வதோடு மட்டுமல்லாமல் பெண்களை கொடூரமாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வடக்கு உத்திரபிரதேசம் பகுதியில் உள்ள ஹத்ராஸ் என்ற இடத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பலனளிக்காமல் இறந்த இளம்பெண்ணின் உடலை அவரது உறவினர்களிடம் கூட தெரிவிக்காமல் போலீசார் இரவோடு இரவாக தகனம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் உத்திரப்பிரதேசத்துக்கு சென்ற போது அவர்களை போலீசார் தாக்கிய சம்பவம் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'ஜென்டில்மேன்' நாயகி மதுபாலா தனது டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஹத்ராஸ் சம்பவம் குறித்து ஆவேசமாக பேசியுள்ளார். அவர் கூறியதை கேட்போம்.... முதன்முதலாக நான் மேக்கப் போடாமல், எனக்கு மிகவும் பிடித்த சிவப்பு லிப்ஸ்டிக் இல்லாமல், வியர்வை சொட்டச் சொட்ட தலை முடியை கூட சீவாமல் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளேன்.நம்முடைய முகத்தில் கறை இருந்தால் பரவாயில்லை, மனதில்தான் எந்தக் கறையும் இருக்கக் கூடாது. இந்த கொரோனா காலத்தில் தான் ஹேப்பிடெமிக் என்ற வார்த்தையை நான் முதன்முதலாக கேள்விப்படுகிறேன். கொரோனா காரணமாக நமது மனித சமூகத்திற்கு பெரும் கேடு ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும்பாலானோர் கடும் பாதிப்படைந்துள்ளனர். ஏராளமான மனித உயிர்களை நாம் இழந்து விட்டோம். ஆனாலும் கடும் இழப்புக்கு இடையிலும் என்றாவது ஒருநாள் விடிவுகாலம் ஏற்படும் என நினைத்து நாம் வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு கொண்டு செல்கிறோம்.

ஆனால் சமீப காலமாக நமது நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் கடும் வேதனை அடைய வைக்கிறது. இதன் மூலம் நமது சமூகத்திற்கு என்ன நல்ல தகவல் கிடைக்கிறது என தெரியவில்லை. இது மனிதன் மனிதனுக்கு எதிராக நடத்தும் யுத்தமாகும். எப்படி இது போன்ற கொடும் செயல்களை செய்ய முடிகிறது என தெரியவில்லை. பெண்களை பலாத்காரம் செய்பவர்களை பொதுமக்கள் முன்னிலையில் நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும். அதை டெலிவிஷன் மூலம் உலகம் முழுவதும் காண்பிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இனி யாரும் இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபடக்கூடாது. பொது இடங்களில் வைத்து பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் தொடும்போதும், பார்க்கும் போதும் பெண்கள் அனுபவிக்கும் மனநிலை யாருக்கும் தெரியாது. எனவே இதுபோன்ற கொடுமைகளை தடுக்க கடும் சட்டம் நமது நாட்டுக்கு மிகவும் அவசியமாகும் என்று ஆவேசத்துடன் கூறுகிறார் நடிகை மதுபாலா.

More News >>