கல்லூரி மாணவியுடன் அதிமுக எம்.எல்.ஏ. ரகசிய காதல் திருமணம்... கடத்தியதாக பெண்ணின் தந்தை புகார்.

அதிமுக எம்.எல்.ஏ பிரபு, ஒரு கல்லூரி மாணவியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். மாணவியின் தந்தை தனது மகளை எம்.எல்.ஏ. கடத்திச் சென்று விட்டதாக புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு(34), எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்தார். பிறகு டிடிவி தினகரன் அணிக்கு போய் விட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கே வந்து விட்டார். இவர் தியாகதுருகத்தில் வசித்து வருகிறார். அதே ஊரில் சேலம் சாலையில் சுவாமிநாதன் என்ற கோயில் அர்ச்சகர் வசித்து வந்தார். அவரது மகள் சவுந்தர்யா(19), திருச்செங்கோட்டில் உள்ள கலைக் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சவுந்தர்யாவும், பிரபுவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் தியாகதுருகத்தில் உள்ள பிரபுவின் வீட்டில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணப் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிரபு, பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றதாக குறிப்பிட்டிருக்கிறார்.ஆனால், சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர் தீக்குளிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், தனது மகள் சவுந்தர்யாவை பிரபு கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அதிமுக எம்.எல்.ஏ.வின் இந்த ரகசிய காதல் திருமணம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. அதிமுக வட்டாரங்களிலும் இந்த திருமணம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More News >>