மெரினாவில் இம்மாத இறுதிவரை மக்களுக்கு அனுமதி இல்லை: மாநகராட்சி தகவல்.

கொரானா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் மக்கள் அதிக அளவில் கூடும் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்கா, சினிமா தியேட்டர் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும் கடற்கரையில் குறிப்பாக மெரினா கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.இந்த நிலையில் மீனவர் நலன் என்ற அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் என்பவர் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் மெரினா கடற்கரை மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும் மெரினா கடற்கரையில் பொது மக்களை அனுமதிப்பது குறித்து அரசு எடுத்துள்ள முடிவு என்ன என்பது குறித்தும் கடற்கரையில் புதிய கடைகள் வைக்க லைசென்ஸ் வழங்குவது குறித்த டெண்டர் தொடர்பான பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சென்னை மாநகராட்சி சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில் சென்னையில் மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் இம்மாதம் 31-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தமிழகத்தில் இம்மாதம் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு விட்டதால் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் நவம்பர் 9ம் தேதி திறக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து டெண்டர் திறப்புக்கு நவம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

சென்னையில் ஊரடங்கை மீறுவோருக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் வசூலித்து வருகின்றனர். அத்து மீறலில் ஈடுபட்டால் 500 ரூபாயும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 200 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் தடையை மீறி கடற்கரைக்கு வருவோரிடமும் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

More News >>