சிறுமியிடம் சில்மிஷம் : அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி..!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான வழக்கில் நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.அதிமுக முன்னாள் எம்எல்ஏவான நாஞ்சில் முருகேசன் மீது 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக நாகர்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இது தொடர்பான வழக்கின் விசாரணையின் போது பாதிக்கப்பட்ட சிறுமி , தனது தாயாரின் சம்மதத்துடன் கடந்த சில ஆண்டுகளாகப் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து போலீஸ் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஜாமீன் கோரி நாஞ்சில் முருகேசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில்,2017 ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிடும் நிலையில் அப்போதெல்லாம் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. ஏதோ உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு சோடிக்கப்பட்ட வழக்காக உள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.முதற்கட்ட விசாரணையின் போது இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே தனது ஜாமீன் மனுவை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி இளந்திரையன் மனுதாரர் தரப்பில் ஜாமீன் கோரிய மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால் மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.