தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் படத்தையோ பேச்சையோ.. பயன்படுத்தக்கூடாது.. பீகார் பா.ஜ.க. எச்சரிக்கை

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.அங்குள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 122 இடங்களிலும், பா.ஜ.க. 121 இடங்களிலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி, பீகாரில் தனித்தே போட்டியிடுகிறது.

தேசிய அளவில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்தாலும் பீகாரில் தன்னிச்சையாக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற நப்பாசையுடன் தனித்து களம் இறங்குகிறது அதே சமயம் தேர்தல் பிரச்சாரத்தில் லோக் ஜனசக்தி, பிரதமர் மோடியின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி வருகிறது.

இதை பா.ஜ.க. தலைவரும், பீகார் மாநில துணை முதல்- அமைச்சருமான சுஷில் மோடி கடுமையாகச் சாடி வருகிறார். பீகார் தேர்தல் தொடர்பான போஸ்டர்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை, ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.கூட்டணிக் கட்சிகள் மட்டுமே பயன்படுத்தலாம். வேறு யாரும் மோடியின் போட்டாவை பயன்படுத்தக் கூடாது. அதுமட்டுமல்லாது அவரது பேச்சுகளையும் பிரச்சாரத்தில் பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் எழுத இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More News >>