அக்கவுண்ட் தேவைப்படாத வகுப்பு: ஸூம் புதிய பாதுகாப்பு நடவடிக்கை...!

கொரோனா கொள்ளைநோய் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் வீடியோ சந்திப்பு தளமான ஸூம் மெய் நிகர் வகுப்பறை அனுபவத்தைத் தந்து கல்விக்குப் பெருமளவில் உதவி வருகிறது. ஸூம், அத்தியாவசியமாகிவிட்ட நிலையில் தற்போது புதிய பாதுகாப்பு மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பயன்பாடு அதிகரித்து வருகிற நிலையில் ஸூம் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது. பயனர்களின் தரவுகள் பாதுகாக்கப்படுவதற்கான புதிய விதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஸூம் பயன்பாடு அதிகரிக்கும் நிலையில் அதில் இடைப்பட்டு தேவையற்ற தகவல், ஆபாசப் படங்கள், மிரட்டல் செய்திகளை விஷமிகள் காட்சிப்படுத்துகின்றனர். வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள், மாணவ மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர் இதைக் குறித்து கவலை தெரிவித்த நிலையில் வெளிநிலை அதிகாரப்பூர்வ அனுமதி (external authentication) வசதியை ஸூம் அறிமுகம் செய்துள்ளது.

ஒற்றை உள்நுழைவு வசதி [Single Sign-On (SSO)] ஒரே நேரத்தில் ஒரேவித விவரங்களைக் கொண்டு அனைத்து செயல்பாடுகள், தரவு மற்றும் சேவைகளைப் பயனர்கள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கிறது. ஏற்கனவே உள்ள ஒற்றை உள்நுழைவு வசதியின்படி ஆசிரியர்களும் அலுவலர்களும் தங்கள் ஸூம் கணக்கைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடிந்தது.தற்போது இந்த வசதி வகுப்பில் பங்குபெறும் மாணவ மாணவியருக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. ஸூம் கணக்கு இல்லாமலும் மாணவ மாணவியர் ஒருங்கிணைந்த வகுப்பறை அனுபவத்தைப் பெற இது உதவி செய்யும்.

வெளிநிலை அதிகாரப்பூர்வ அனுமதி (external authentication) வசதியைப் பயன்படுத்தி பள்ளி மற்றும் கல்லூரிகளின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் தங்களுக்கென ஸூம் கணக்கை உருவாக்கலாம். மாணவ மாணவியர் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி அடையாளம் அல்லது SSO ஆகியவற்றைக் கொண்டு வகுப்பில் இணைந்து கொள்ள முடியும். பள்ளி மற்றும் கல்லூரியில் வழங்கப்படும் பயனர் விவரங்களைக் கொண்டு மட்டுமே இதில் நுழைய முடியும். மாணவ மாணவியர் எவ்வளவு நேரம் வகுப்பைக் கவனித்தார்கள் என்ற விவரமும் தானாகவே பதிவாகிவிடும் என்று ஸூம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More News >>