காதல் காரணமா? அடித்துக் கொல்லப்பட்ட டியூஷன் ஆசிரியர்...!

மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்குக் காதல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேற்கு டெல்லியின் ஆதர்ஷ் நகரில் வசித்து வந்தவர் ராகுல் (வயது 18). அவரது குடும்பம் கிராமத்திலிருந்து பிழைப்புக்காக டெல்லிக்குக் குடிவந்திருந்தது. பட்டப்படிப்பு இரண்டாமாண்டு படித்து வந்த ராகுல், வீட்டில் டியூஷனும் எடுத்து வந்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7ம் தேதி ராகுல், ஒரு இளம்பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்ததும், அப்போது அவரை யாரோ அழைப்பதும் கண்காணிப்பு காமிரா பதிவுகளால் தெரிய வந்துள்ளது. நடந்து சென்று கொண்டிருந்த ராகுலை 8 முதல் 10 பேர் கொண்ட கும்பல் அடித்துத் துவைத்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராகுல் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இளம்பெண் ஒருவருடன் ராகுல் பழகிவந்ததாகவும் அதைப் பிடிக்காத அப்பெண்ணின் சகோதரனும் உறவினர்களும் சேர்ந்து ராகுலைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் மூன்று சிறுவர் உள்பட ஐந்து பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

"மற்றவர்களுக்கு உதவுவதற்காக ராகுல் டியூஷன் எடுத்து வந்துள்ளார். அவரது குடும்பம் அதிர்ச்சியடைந்துள்ளது. அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் உதவி வழங்கியுள்ளோம். நல்ல வழக்குரைஞர்களின் உதவி கிடைக்கச்செய்வோம். இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் விரைந்து தண்டனை பெறுவதை உறுதி செய்வோம்," என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

More News >>