தமிழகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 6 லட்சம் பேர் மீட்பு.

தமிழகத்தில் இது வரை 6 லட்சத்து 51 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 6 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஐந்தாறு மாதங்களாக தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்கு குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.10) 5242 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 8 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 51,370 பேருக்கு தொற்று பாதித்திருக்கிறது. அதே சமயம், தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5222 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 97,033 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 67 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,187 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 44 ஆயிரத்து 150 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று புதிதாக 1272 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 309 பேருக்கும், திருவள்ளூர் 199, காஞ்சிபுரம் 160, கோவையில் 392, கடலூர் 138, நாமக்கல் 153, சேலம் 335, தஞ்சாவூர் 189, திருவண்ணாமலை 161, திருவாரூர் 183, வேலூர் மாவட்டத்தில் 126 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த 12 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 80,751 பேருக்கும், செங்கல்பட்டில் 39,102 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 34,542 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் பலி எண்ணிக்கை தமிழகத்தை விட குறைவாகவே உள்ளது. தமிழகத்தில்தான் கொரோனா பலி 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம் மாவட்டங்களில்தான் இறப்பு அதிகமாக உள்ளது.

More News >>