முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து 125 ஆண்டு நிறைவு: பொங்கல் வைத்து மரியாதை.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 125 ஆண்டு நிறைவடைந்ததை. விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

மதுரை, , திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்கான முக்கிய ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை இருந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொறியாளர் பென்னிகுவிக் என்பவர் இந்த அணையை கட்டினார். அவரை போற்றும் வகையில் தமிழக அரசு கூடலூர் லோயர்கேம்பில் அவருக்கு நினைவு மணிமண்டபமும், முழு உருவ வெண்கலசிலையும் அமைத்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை கட்டும் பணி 1887-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி தொடங்கி 1895-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 155 அடியாகும். இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக 1886-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அன்றைய சென்னை மாகாணத்திற்கும், திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே 999 ஆண்டு கால ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி சென்னை மாகாணம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு ஒரு ஏக்கருக்கு ஆண்டு வாடகையாக ரூ.5 செலுத்த வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது.

1895-ம் ஆண்டு பென்னிகுவிக் இந்த அணையை கட்டி முடித்தபின் அக்டோபர் மாதம் 10-ந்தேதி முதன் முதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டு நேற்றுடன் 125 ஆண்டு முடிவடைந்தது. இதை முன்னிட்டு 5 மாவட்ட அனைத்து விவசாயிகள் நேற்று பென்னிகுவிக் மணிமண்டபம் முன்பு பொங்கல் வைத்து அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குருவனாற்று பாலத்தில் இருந்து முல்லைப்பெரியாற்றில் மலர்கள் தூவியும் விவசாயிகள் வழிபாடு செய்தனர்.

More News >>