தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் குஜராத் போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ராஞ்சி காவல்துறையிடம் ஒப்படைக்க இருப்பதாகக் குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமை வகிக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுற்றதை ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்திருந்தனர். ஆனால், ஒருவர் தோனியின் மனைவி சாக்ஷியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரது ஐந்து வயது மகள் ஷிவாவுக்கு மோசமான மிரட்டல் விடுத்துப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவை கண்ட பிரபலங்கள் உள்ளிட்ட அநேகர், பதிவிட்டிருந்தவர்மேல் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியிருந்தனர்.

ராஞ்சி காவல்துறை அனுப்பிய தகவலின் பேரில் குஜராத் மேற்கு கட்ச் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் முந்த்ரா என்ற இடத்தில் நம்னா கபாயா என்ற கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவரை விசாரித்தனர். அவர் இன்ஸ்டாகிராமில் மிரட்டல் பதிவை இட்டதாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அச்சிறுவனை ராஞ்சி காவல்துறையிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

More News >>