தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுகிறது.. புதிய பாதிப்பு குறைகிறது..

தமிழகத்தில் 2வது நாளாக புதிய கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்குக் கீழ் குறைந்திருக்கிறது.தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டது. ஆகஸ்ட் இறுதியில் இது 7 ஆயிரத்தையும் தாண்டியது. தற்போது படிப்படியாகக் குறைந்து நேற்று முன் தினம்(அக்.12) முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. அன்று, மாநிலம் முழுவதும் 78,440 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், புதிதாக 4879 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இரண்டாவது நாளாக நேற்றும்(அக்.13) புதிதாகப் பாதித்தவர் எண்ணிக்கை குறைந்தது. நேற்று மாநிலம் முழுவதும் 83,803 பரிசோதனைகள் செய்யப்பட்டும், புதிதாக 4666 பேருக்குத்தான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 65,930 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

அதே சமயம், தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5117 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 12,320 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 57 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,371 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 44 ஆயிரத்து 239 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று புதிதாக 1164 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 252 பேருக்கும், திருவள்ளூர் 236, காஞ்சிபுரம் 129, கோவையில் 398, திருப்பூர் 166, நீலகிரி 123, நாமக்கல் 129, சேலம் 277, தஞ்சாவூர் 118, திருவாரூர் 109, கடலூர் 138, வேலூர் மாவட்டத்தில் 105 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த 13 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 84,429 பேருக்கும், செங்கல்பட்டில் 39,870 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 35,179 பேருக்கும், கோவையில் 37,919 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் பலி எண்ணிக்கை தமிழகத்தை விடக் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில்தான் கொரோனா பலி 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

More News >>