ரஜினிகாந்த் தொடர்ந்த சொத்து வரி வழக்கு: நீதிபதி எச்சரிக்கை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது.இந்த மண்டபத்துக்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் மாநகராட்சி அனுப்பிய சொத்து வரிக்கான நோட்டீசை ரத்து செய்யக்கோரி ராகவேந்திரா திருமண மண்டப உரிமையாளரான நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவில் கூறியது: கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மத்திய, மாநில அரசுகள் விதித்த பொது முடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் சொத்து வரியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். கொரோனா கால வரி குறைப்புக்கு ராகவேந்திரா மண்டபத்திற்கு தகுதி உள்ளது. இவ்வாறு மனுவில் ரஜினிகாந்த் கூறியிருந்தார். சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி உத்தரவிடும்போது, மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அத்துடன், அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப் போவதாகவும் எச்சரித்ததுடன் வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பு வழக்கறிஞர் கூறினார். வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக மனு அளிக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார்.

More News >>