எடப்பாடி அரசுக்கு சூடு வைத்த கமல் கட்சி.. 200 பெருமுதலாளி அனுமதி, 2000 தொழிலாளர்கள் கல்தா?

கோயம்பேடு மார்க்கெட்டில் 200 பெரு முதலாளிக்கு மட்டும் 2000 தொழிலாளர்களுக்கு கல்தாவா என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது.

மக்கள்‌ நீதி மய்யம்‌ தொழிலாளர்‌ நல அணி மாநில செயலாளர்‌ சு. ஆ. பொன்னுச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:பொதுமக்கள்‌ அதிகமாக கூடுவதால்‌ கொரோனா நோய்‌ தொற்று பரவுகிறது என்கிற காரணத்தை கூறி கோயம்பேடு காய்கறி சந்தையை தமிழகத்தின்‌ ஒட்டுமொத்த கொரோனாவின்‌ உற்பத்தி மையமாக சித்தரித்து திருமழிசைக்கு மாற்றியதோடு, அங்கேயும்‌ பாதுகாப்பு காரணங்களைச்‌ சுட்டிக்‌ காட்டி மார்க்கெட்‌ மேனேஜ்மெண்ட்‌ கமிட்டியானது (MMC) சுமார்‌ 200 பெரு முதலாளிகளுக்கு மட்டும்‌ இடமளித்து சுமார்‌ 2000க்கும்‌ மேற்பட்ட சிறு வணிகர்களையும்‌ அவர்களை நேரடியாகவும்‌, மறைமுகமாகவும்‌ சார்ந்திருந்த சுமார்‌ 1லட்சத்திற்கும்‌ மேற்பட்ட தொழிலாளர்களின்‌ வாழ்வாதாரத்தையும்‌ கவனத்தில்‌ கொள்ள தவறி விட்டது. தளர்வுகள்‌ அறிவிக்கப்பட்டிருந்தாலும்‌ கூட ஊரடங்கு முழுமையாக விலக்கிக்‌ கொள்ளப்படாத அதே நேரம்‌ கொரோனாவில்‌ இருந்து தமிழகம்‌ மீண்டு வந்து கொண்டிருப்பதாக கூறி திருமழிசையில்‌ இருந்து காய்கறி சந்தையை கோயம்பேட்டிற்கு மாற்றியுள்ள தமிழக அரசும்‌, CMDA நிர்வாகமும்‌ மீண்டும்‌ இங்கேயும்‌ அதே 200 பெரு முதலாளிகளுக்கே வாய்ப்பளித்திருப்பது மிகப்‌ பெரிய அளவில்‌ முறைகேடுகள்‌ நடைபெற்றுள்ளதோ...? என்கிற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சிறுவணிகர்களையும்‌, தொழிலாளர்ளையும்‌ கவனத்தில்‌ கொள்ளாமல்‌ பெரு முதலாளிகளுக்கு மட்டும்‌ சாதகமாக நடந்து கொண்டிருக்கும்‌ CMDA மற்றும்‌ MMC நிர்வாகத்திற்கு மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ தொழிலாளர்கள்‌ அணி கடும்‌ கண்டனத்தை தெரிவித்துக்‌ கொள்கிறது.

மேலும்‌ கடந்த ஏழு மாதங்களாக ஊரடங்கு தொடர்ந்து வரும்‌ நிலையில்‌ கோயம்பேடுகாய்கறி சந்தை மூடல்‌, இடமாற்றம்‌ போன்ற காரணங்களால்‌ 2000க்கும்‌ மேற்பட்ட சிறுவணிகர்களும்‌ தொடர்ச்சியாக தொழில்‌ நடத்த முடியாமல்‌ அல்லல்பட, அவர்களை நேரடியாகவும்‌, மறைமுகமாகவும்‌ சார்ந்திருக்கும்‌ 1லட்சத்திற்கும்‌ மேற்பட்ட தொழிலாளர்களும்‌ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்‌ என்பதை கவனிக்க தவறிய எடப்பாடி பழனிச்சாமி அரசு சாமானிய மக்களுக்கான அரசல்ல என்பதை மீண்டும்‌ ஒருமுறை உணர்த்தியுள்ளது.

எனவே கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில்‌ 200 பெரு முதலாளிகளுக்கு மட்டுமே அனுமதி என்கிற நிலையை மாற்றி, மீதமுள்ள 2000க்கும்‌ மேற்பட்ட சிறு வணிகர்கள்‌ உடனடியாக தங்களின்‌ கடைகளை திறந்து வணிகம்‌ செய்ய அனுமதித்து பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின்‌ வாழ்வாதாரத்தையும்‌ உறுதி செய்ய தமிழக அரசு முன்‌ வர வேண்டும்‌ என மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ தொழிலாளர்கள்‌ அணி சார்பில்‌ வலியுறுத்துகிறோம்‌. இவ்வாறு மக்கள்‌ நீதி மய்யம்‌ தொழிலாளர்‌ நல அணி மாநில செயலாளர்‌ சு. ஆ. பொன்னுச்சாமி அறிக்கையில் கூறி உள்ளார்.

More News >>