வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நவ.3 ல் சர்வ கட்சி கூட்டம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடர்பாக வரும் நவம்பர் 3 ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை ஜனவரி 20-ம் தேதி வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான பணிகளை பணியை மேற்கொள்வதற்காக, நவம்பர் 16 ல் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் வாக்காளர்கள், தங்கள் பெயர் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். பெயர் சேர்ப்பது, ஆட்சேபனை தெரிவிப்பது போன்றவற்றுக்கு நவம்பர் 16-ம் தேதியில் இருந்து டிசம்பர் 15-ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த இடைப்பட்ட நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்.

இதற்கிடையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ( மாவட்ட ஆட்சியர்கள்) கடந்த மாதம் 3-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.இதன்பிறகு சத்யபிரதா சாகு , வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தொடர்பான சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் குறித்து நவம்பர் 3ம் தேதி, தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்

மேலும் தமிழக சட்டமன்ற தேர்தல் காலக்கட்டத்தில் கொரோனா பாதிப்பு இருக்கும் பட்சத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்குப்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 3 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குப் பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது, இறந்தவர் பெயர்களை நீக்காமல் இருப்பது உள்பட சில குற்றச்சாட்டுகளை தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன. இந்த நிலையில், நவம்பர் 3-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>