சபரிமலையில் நடை திறக்கப்பட்டது.. நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி..!

ஐப்பசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை முதல் தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்றுச் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்கு நடை திறக்கும்போது தரிசனம் செய்ய அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இன்று முதல் தினமும் 250 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சபரிமலையில் பக்தர்கள் யாரும் தங்க அனுமதி அளிக்கப்படாததால் மாலையில் நடை திறக்கும்போது அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதால் நாளை முதல் பக்தர்களை அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்படும். நாளை முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் ஐப்பசி மாத பூஜைகள் நடைபெறும். இந்த 5 நாட்களிலும் தினமும் 250 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு தொடங்கிய 2 நாட்களிலேயே அனைத்து நாட்களுக்குமான முன்பதிவு முடிந்துவிட்டது.

சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. நெய்யபிஷேகம் செய்யவும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பம் மற்றும் அரவணை கவுண்டர்கள் வழக்கம்போல செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் எப்படி தரிசனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள் என்றும், அதன் படி கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டுமென்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

More News >>