மத்திய பிரதேசத்தில் உடல்.. பெங்களூருவில் தலை.. ஓர் அதிர்ச்சி சம்பவம்!

மத்திய பிரதேச மாநிலம் பெத்துல் பகுதியில் கடந்த 3 ஆம் தேதி ரயில் தண்டவாளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்ததாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்க்கையில், தண்டவாளத்தில் சிதறிய உடல் பாகங்கள் இருக்க அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் பாகங்கள் கிடைத்த நிலையில் அந்த நபரின் தலை மட்டும் கிடைக்கவில்லை. காணாமல் போன தலை குறித்து பெத்துல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, கடந்த 4ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற ராஜதானி விரைவு ரயில் இஞ்சினில் தலை சிக்கியிருப்பதை ரயில்வே ஊழியர்கள் காவல்துறைக்கு சொல்ல ஒருவழியாக நிம்மதி பெருமூச்சு விட்டனர் காவல்துறையினர். பெங்களூருவில் கிடைத்த தலையும், மத்திய பிரதேசத்தில் கிடைத்த உடலின் பாகங்களும் உயிரிழந்த நபருடையது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பெத்துல் விரைந்த பெங்களூரு காவல்துறை உறுதி செய்தது. எனினும் உயிரிழந்த நபரின் குடும்பத்தினரிடம் பெங்களூரு வருவதற்கான போதுமான பணம் இல்லாததை உணர்ந்த போலீஸார் அந்த தலையை பெங்களூருவிலேயே புதைத்தனர். தொடர்ந்து உயிரிழந்த நபர் விபத்தில் இறந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா என பெத்துல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

More News >>