இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் 3 நாள்கள் கிணற்றுக்குள் தவித்த இளம்பெண்!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இருக்கிறது மாலூர் என்ற கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் இன்ஸ்டாகிராம் மூலமாக ஆதர்ஷ் என்ற 22 வயது நபரிடம் ஒரு மாதத்திற்கு முன்பு பழக்கமாகியுள்ளார். இருவரும் இந்த ஒரு மாதத்தில் நெருங்கிய நண்பர்களாகி உள்ளனர். இதையடுத்து இருவரும் சந்திக்க விரும்பி, ஆதர்ஷ் இளம்பெண்ணை அழைத்துள்ளார். இதையடுத்து ஆதர்ஷை சந்திக்க அந்தப் பெண் பெங்களூரு அருகிலுள்ள தேவனஹள்ளிக்கு பேருந்தில் வந்திருந்துள்ளார். சம்பவத்தன்று மாலை 5.30 மணியளவில் தேவனஹள்ளியில் இருந்து அருகில் உள்ள தனது கிராம பண்ணை வீட்டிற்கு பெண்ணை அழைத்துச் சென்றிருக்கிறார் ஆதர்ஷ்.

அங்கு சென்ற பிறகு, இளம்பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் ஆதர்ஷ். ஆனால் அதற்கு இளம்பெண் உடன்பட மறுக்க, பெண்ணை கிணற்றுக்குள் தள்ளிவிட்டு இரவோடு இரவாக அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். அவரை காப்பாற்ற யாரும் அங்கே வரவில்லை. இதற்கிடையே, மூன்று நாட்களுக்கு பின் கிணற்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்க இன்று அருகில் உள்ள கிராமத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பிறகே ஒரு கிரேன் வரவழைக்கப்பட்டு அப்பெண் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விசாரணைக்கு பிறகு வாலிபர் ஆதர்ஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News >>