தங்கக் கடத்தல் வழக்கு ஐஏஎஸ் அதிகாரி மருத்துவமனையில் திடீர் அனுமதி.

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இன்று இரவு சுங்க இலாகாவின் விசாரணைக்கு இடையே திடீரென மயக்கம் போட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னாவுடன் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன் இவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையே ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, மத்திய அமலாக்கத் துறை மற்றும் சுங்க இலாகாவினர் பலமுறை விசாரணை நடத்தினர். இதுவரை இவரிடம் 100 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடந்துள்ளது.

இந்நிலையில் சிவசங்கர் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார். இதை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம் வரும் 23ம் தேதி வரை சிவசங்கரை கைது செய்ய தற்காலிக தடை விதித்தது. இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக கோரி சுங்க இலாகா சிவசங்கருக்கு நோட்டீஸ் கொடுத்தது. உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போன் மூலமும் சுங்க இலாகா அதிகாரிகள் அவரை தொடர்புகொண்டு கூறினர். ஆனால் தனக்கு உடல்நலக் குறைவு இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்றும் சிவசங்கர் கூறினார்.

ஆனால் அதை ஏற்காமல் இன்று மாலை 6 மணியளவில் சுங்க இலாகா அதிகாரிகள் திருவனந்தபுரத்திலுள்ள சிவசங்கரின் வீட்டுக்கு சென்றனர். தொடர்ந்து அவரை விசாரணைக்காக கொண்டு செல்ல முயன்றனர். இந்த சமயத்தில் திடீரென்று சிவசங்கருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுங்க இலாகாவினர் அவரை திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர்களது வாகனத்திலேயே கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக சிவசங்கர் நாடகமாடினாரா என்பது குறித்து சுங்க இலாகாவினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பது குறித்து சுங்க இலாகாவினர் ஆலோசித்து வருகின்றனர். இந்த சம்பவம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>