மக்களின் தீபாவளி கொண்டாட்டம் மத்திய அரசின் கைகளில் .. உச்சநீதிமன்றம் கருத்து

சாமானிய மக்கள் தீபாவளி கொண்டாடுவது மத்திய அரசின் கைகளில் உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.கடந்த மார்ச் 25 முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது பொது முடக்கத்தால் மக்களில் பலர் வருவாய் இழந்து வங்கிக் கடன்களுக்குத் தவணை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது.

இதையொட்டி மத்திய ரிசர்வ் வங்கி மாதத் தவணைகளைச் செலுத்தக் கடந்த மாதம் இறுதி வரை அவகாசம் அளித்தது. அதற்குள் தவணைகளைச் செலுத்தாத நபர்களின் கடன் தொகைக்கான வட்டிக்கும் வட்டியை வசூலிக்கலாம் எனக் கடன் அளித்த நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்துப் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி அசோக் குமார் தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரித்து வருகிறது.இந்த வழக்கு விசாரணையின் போது ரூ. 2 கோடி வரை கடன் வாங்கியவர்களின் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முறையை ரத்து செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ரிசர்வ் வங்கியும் அந்த ஒப்புதலை ஏற்றுக்கொண்டது. ஆனால் இதை நடைமுறைப்படுத்த மேலும் ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு வங்கிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் தற்போதுள்ள இக்கட்டான சூழலில் இவ்வாறு கால அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

மேலும் வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையைச் சாமானிய மக்கள் கொண்டாடுவது மத்திய அரசின் கைகளில்தான் உள்ளது எனவும் மத்திய அரசுதான் மனம் வைத்து இந்த தள்ளுபடி ரத்து செய்வதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

More News >>