3,000 சீன தொடர்பு போலி யூடியூப் சேனல்கள் நீக்கம்: கூகுள் அதிரடி

சமூக ஊடக வீடியோ தளமான யூடியூப்பில் பெரிய அளவில் போலி செய்திகளைப் பரப்ப ஏற்பாடு செய்ததாகக் கூறி 3,000 போலி யூடியூப் சேனல்களை அகற்றியுள்ளதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூலை - செப்டம்பர் கால கட்டத்தில் இந்த சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆகவே, இவற்றைக் கொண்டு பயனர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. நீக்கப்பட்டுள்ள யூடியூப் சேனல்களில் பலவற்றின் வீடியோக்கள் 10 முறை மட்டுமே பார்க்கப்பட்டுள்ளன. அவையும் பொது பயனர்களால் அத்தளங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் போலிக் கணக்குகளிலிருந்து பார்க்கப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதில் போட்டியிடும் ஜோ பிடன் மற்றும் டொனால்டு டிரம்பின் பரப்புரை குழு பணியாளர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்குகளின் பயனர் மற்றும் கடவுச்சொல் போன்ற தரவுகளைக் கைப்பற்றும் முயற்சிகள் (phising) சீனா மற்றும் ஈரானிய அமைப்புகளால் எடுக்கப்பட்டதையும் கூகுள் கண்டறிந்துள்ளது.

இந்தப் போலி யூடியூப் சேனல்களில் கோவிட்-19 குறித்த ஹாங்காங் மற்றும் சீனா தொடர்பான செய்திகள் மாண்டரின் மொழியில் பதிவிடப்பட்டுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நடந்த இனவெறி நிகழ்வுகள், காட்டு தீ, கோவிட்-19 குறித்த பதிவுகளும் மாண்டரின் மற்றும் ஆங்கிலமொழியில் இடப்பட்டுள்ளன. குழப்பமான மொழிபெயர்ப்புகள், கணினியில் உருவாக்கப்பட்ட குரல்கள் இப்பதிவுகளில் இடம்பெற்றுள்ளன.இந்த போலி சேனல்கள் பொய்யான தாக்கத்தை ஏற்படும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்து கூகுள் அவற்றை நீக்கியுள்ளது.

More News >>