மணல் கடத்தல் வழக்கில் காவல்துறை விசாரணை : உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி.

நெல்லையில் நடந்த மணல் கடத்தல் வழக்கில் காவல்துறையின் விசாரணை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை பழைய பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த நவீன பேருந்து நிலையம் அமைக்க 30 அடி ஆழத்துக்கு கீழ் தளம் அமைக்க திட்டமிடப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டது. 30 அடி ஆழம் வரை தோண்டப்பட்டதில் அந்த இடத்தில் ஆற்றுமணல் குவிந்து இருந்தது. கிடைத்த ஆயிரக்கணக்கான யூனிட் மணலை ஒப்பந்ததாரர் உள்ளிட்ட சிலர் கடத்தி விற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கேரளத்துக்கு மணலை கடத்தி விற்றதன் மூலம் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை கண்ட நீதிபதிகள் மணல் கடத்தல் தொடர்பான நெல்லை போலீசின் விசாரணை திருப்தியாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். மணல் கடத்தல் வழக்கு பற்றி முழுமையான நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

More News >>