போலி பத்திரங்கள் மூலம் அரசு நிலம் விற்பனை: பத்திரப்பதிவு துறை ஊழியர் ஒருவர் கைது.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல்துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்த விவகாரத்தில் பத்திர பதிவு துறை ஊழியர் ஒருவர் எட்டு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் சங்கரன்கோவில் பிரதான சாலை அருகே காவல்துறைக்குச் சொந்தமான 2.1 ஏக்கர் நிலம் உள்ளது. சர்வே எண் 635-2ல் உள்ள இந்த நிலம் புறம்போக்கு நிலமாக இருந்தது. கடந்த 2004-ம் ஆண்டு வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அலுவலக உத்தரவின்படி காவல்துறைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் காவலர் குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டது. காவல்துறை சார்பில் அறிவிப்பு விளம்பரமும் வைக்கப்பட்டது. ஆனால், கட்டிடம் எதுவும் கட்டாமல் இந்த நிலம் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளது. காவல்துறை வைத்த அறிவிப்பு விளம்பரத்தையும் மர்ம நபர்கள் அப்புறப்படுத்திவிட்டனர். இப்பகுதியில், ஒரு சென்ட் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் முதல் 30 லட்சம் வரை உள்ளது.

இந்நிலையில், சிலர் இந்த நிலத்துக்கான போலியான பொது அதிகார ஆவணம் தயார் செய்து போலி பத்திரம் பதிவு செய்து விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து, சுரண்டை கிராம நிர்வாக அலுவலர் பாலு அளித்த புகாரின் பேரில் சுரண்டை போலீசார் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களான ராஜேந்திரன், மனோகரன் உட்பட 13 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 465, 467,468, 471, 420 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். பத்திரபதிவு அலுவலக ஊழியர்கள் த லைமறைவாகி முன் ஜாமீன் பெற்றனர். இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ராஜேந்திரன் என்பவரை சுரண்டை போலீசார் கைது செய்தனர். இவர் தற்போது தென்காசி அருகே உள்ள இடைகால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிது வருகின்றார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள காவல்துறைக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில் எட்டு மா தங்களுக்கு பிறகு பத்திரபதிவு துறை ஊழியர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.

More News >>