டைரக்டர்களுக்கு பிசாசு பட இயக்குனர் வலியுறுத்தல்.. விமர்சனங்களை ஏற்க வேண்டும்..

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. சித்திரம் பேசுதடி தொடங்கி துப்பறிவாளன், சைக்கோ, பிசாசு போன்ற பல மாறுபட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புது அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

பின்னர் டைரக்டர் மிஷ்கின் பேசியதாவது: சித்திரம் பேசுதடி படம் தொடங்கி இப்போது வரை என்னை வழிநடத்திச் சென்று கொண்டிருப்பது நீங்கள் மட்டுமே. எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்தும் என்னை கை பிடித்துக் கூட்டிச் சென்றது நீங்கள்தான். இன்று எனக்குப் படம் சார்ந்த சில வேலைகள் இருப்பினும் இது எனது கடமையாக நினைத்து இந்த அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டேன்.

ஒவ்வொரு படம் வருகையிலும் உங்களின் விமர்சனங்களே எங்களை மேற்கொண்டு வழிநடத்திச் செல்கிறது. விமர்சனங்களை எப்போதும் இயக்குனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நானும் அப்படித்தான் படம் நன்றாக இருந்தால் நல்ல விமர்சனங்களையும் நல்லா இல்லை என்றாலும் அதற்குரிய விமர்சனத்தையும் நிச்சயம் ஏற்றுக் கொள்பவன் . என்று கூறிய மிஷ்கின் தனது புதிய படம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் எனது புதிய படம் குறித்து உங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள மிகவும் பெருமைப்படுகிறேன். பிசாசு 2 படத்தின் கதையை கூறி அதற்கு ஒப்புதலும் வாங்கி விரைவில் படம் துவங்க இருக்கிறது. ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க உடன் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் இப்படம் உருவாக இருக்கிறது. இந்த நிகழ்வை முதற் கட்டமாக உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மேலும் சந்தோஷப்படுகிறேன். இந்த நாளில் உங்களுடன் இருந்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் இந்த தமிழ்த் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்துடன் இணைந்து என் முழு ஆதரவைக் கொடுப்பேன்.இவ்வாறு இயக்குனர் கூறியுள்ளார் .

More News >>