நன்றாக விளையாட புத்தியை தீட்ட வேண்டும் தோனிக்கு அட்வைஸ் கொடுப்பது யார் தெரியுமா?

நான் மூளையைப் பயன்படுத்தித் தான் நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடினேன். அதேபோல தோனியும் புத்தியைத் தீட்டினால் எத்தனை வயதானாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறுகிறார் பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி வீரர் மியாண்டட்.சென்னை ரசிகர்கள் தற்போது பெரும் சோகத்தில் உள்ளனர். இதற்குக் காரணம் இந்த சீசனில் சென்னை அணியின் மோசமான விளையாட்டு தான். இதுவரை 9 போட்டிகளில் விளையாடி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் 7வது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. 3 முறை கோப்பையை வென்ற சென்னை அணி இவ்வளவு மோசமாக விளையாடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இந்த முறை கோப்பை தங்களுக்குத் தான் என்ற உற்சாகத்துடன் தான் இந்தியாவிலிருந்து துபாய்க்குச் சென்னை வீரர்கள் விமானம் ஏறினர்.

ஆனால் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே சென்னை அணிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டக்காரர் ரெய்னா சில பிரச்சனைகள் காரணமாக அணியில் இருந்து விலகியது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் அதெல்லாம் தங்களைப் பாதிக்காது என்று தான் சென்னை வீரர்கள் கருதினர். ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் சென்னையின் விளையாட்டு எதிர்பார்த்த அளவு இல்லை. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தோனி விளையாடுவதால் இந்த ஐபிஎல் போட்டியை அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இதுவரை பேட்டிங்கிலோ கேப்டன்சியிலோ தோனி ஸ்பெஷல் ஒன்றும் சம்பவிக்கவில்லை. விக்கெட் கீப்பிங்கில் மட்டும் அவர் சில சாகசங்களை நிகழ்த்தியதைத் தவிரச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இதுவரை அவர் விளையாடவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஜாவித் மியாண்டட் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது: நான் எனது புத்தியைப் பயன்படுத்தித் தான் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடினேன். அதேபோல தோனியும் தனது புத்தியைப் பயன்படுத்தினால் எத்தனை வயது வரை வேண்டுமானாலும் விளையாடலாம். பழையது போல விளையாட முடியாவிட்டாலும், அவரால் அணிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். இடைவிடாத உடற்பயிற்சியும், விளையாட்டுப் பயிற்சியும், வலைப் பயிற்சியும் செய்யவேண்டும். உதாரணத்திற்கு இப்போது 20 சிட் அப்புகள் எடுப்பதாக இருந்தால் அதை 30 ஆக உயர்த்த வேண்டும். ஒரு மணி நேரம் பேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தால் அதை 2 மணி மணிநேரமாக உயர்த்த வேண்டும். தோனிக்கு இது நன்றாகவே தெரியும். அவர் ஏற்கனவே இதுபோன்ற தீவிர பயிற்சியில் ஈடுபட்டு ஈடுபட்டிருப்பார் என்று கூறினார்.

More News >>