நடிகர் சிம்புவின் புதிய தோற்றத்தை வெளியிடும் இயக்குனர்..

நடிகர் சிம்பு கடந்த ஒன்றரை வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அதன்பிறகு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் பிரச்சனை எழுந்தது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அங்குச் சமரச பேச்சில் சுமூக தீர்வு காணப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. இதற்கிடையில் ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் பிரதான வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு வரவே படப்பிடிப்புகள் தடைபட்டன. தொடர்ந்து 5 மாதம் ஊரடங்கு அமலானதால் சிம்பு கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையைக் குறைத்தார். புதிய தோற்றத்துக்கு மாறிய சிம்பு இயக்குனர் சுசீந்திரனிடம் கதை கேட்டார். கிராமத்துப் பின்னணியிலான அக்கதை சிம்புக்குப் பிடித்துப் போக நடிக்க ஒப்புக்கொண்டார்.

கிராமத்துக் கதாபாத்திரத்துக்கு ஏற்ப மீண்டும் தோற்றத்தை கட்டமைத்தார் சிம்பு. எல்லாம் தயாரான பின்னர் திண்டுக்கல்லில் படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு படப் பிடிப்பில் சிம்பு இப்படத்தில் பங்கேற்க முடிவு செய்தார். படப்பிடிப்புக்குச் செல்லும் முன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். ஆனால் அவர் வருவது ரசிகர்களுக்குத் தெரியாத வகையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கோயிலுக்குத் தொப்பி அணிந்து வந்த சிம்பு, உடற் தோற்றத்தை மறைக்கும் வகையில் உடை அணிந்திருந்தார். இதனால் அவரது புதிய தோற்றத்தை யாரும் படம் எடுக்க முடியவில்லை.

சுசீந்திரன் படத்துக்காகச் சிம்பு புதிய தோற்றத்துக்கு மாறி இருப்பதால் அவரது ஃபர்ஸ்ட் லுக் படத்தை வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்கிறார். தமன் இசை அமைக்கிறார்.வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் வரும் நவம்பர் முதல் சிம்பு கலந்து கொள்கிறார்.

More News >>