ஈரலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் அல்சைமரின் தாக்கத்தை குறைக்கும்... வியப்பான உண்மை!

எல்லா வீடுகளிலும் சமையலறையில் தவறாமல் இருக்கக்கூடியது மஞ்சள். நாம் தினமும் பயன்படுத்தும் மஞ்சளுக்கு அநேக மருத்துவ குணங்கள் உள்ளன.

ஆயுர்வேதம், சீன மருத்துவம், காம்போ என்னும் ஜப்பானிய மருத்துவம், எகிப்திய மருத்துவத்தில் மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. முடக்குவாதம், தோல் புற்றுநோய், சின்னம்மை, காயங்களைக் குணப்படுத்துதல், சிறுநீர் பாதை தொற்று, கண்ணின் நடு அடுக்கில் ஏற்படும் தொற்று (யுவெய்டிஸ்), ஈரல் தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.

முடக்கு வாதம்

முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு ஆர்த்ரைடிஸ் பிரச்சனைகளுக்கு சிசிச்சை அளிக்க மஞ்சள் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் அழற்சி இவற்றுக்கு எதிராகச் செயல்படும் திறன் மஞ்சளுக்கு உண்டு. உடலின் செல்களை சேதப்படுத்தக்கூடிய மூலக்கூறுகளை அழிக்கும் ஆற்றல் கொண்ட ஆக்ஸிஜனேற்ற தடுப்பு (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) மஞ்சளுக்கு உள்ளது. மூட்டுவலி, மூட்டில் வீக்கம் மற்றும் அழற்சி கொண்டவர்கள் தினமும் மஞ்சளை எடுத்துக்கொண்டால் தீவிரம் குறையும்.

மூளை

மூளையில் இரத்த ஓட்டத்தைப் பாதிக்கும் அடைப்பினால் பக்கவாதம் போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படும். முதுமையின் காரணமாக மூளையின் செல்கள் அழிந்து அல்சைமர் என்னும் நினைவு குழப்பம் போன்ற குறைபாடுகள் ஏற்படும். மூளையின் ஸ்டெம் செல்களை சரி செய்வதன் மூலம் இக்குறைபாடுகளைக் குணமாக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு இருப்பது குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே அல்சைமர் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கு மஞ்சள் உதவும்.

செரிமானம்

செரிமான தொல்லை ஏற்படும்போது மஞ்சளை அப்படியே சாப்பிட்டால் குணம் கிடைக்கும். மஞ்சள் பித்தப்பையின் செயல்பாட்டைத் தூண்டி பித்தநீரை வெளியேற்றுகிறது. அதன் காரணமாகச் செரிமானம் துரிதமாக நடக்கிறது. வயிற்றில் வாய்வு தொல்லை, உப்பிசம் ஆகியவற்றையும் மஞ்சள் போக்கும்.

காயம்

வீட்டில் பாட்டி இருந்தால் மஞ்சளின் மருத்துவ குணத்தை அறிந்திட வாய்ப்பு கிடைத்திருக்கும். தீ சுட்ட புண் மற்றும் வேறு காயங்கள், வீக்கங்கள் இருந்தால் மஞ்சளைப் பூசும்படி பாட்டி கூறியிருப்பார்கள். மஞ்சளுக்கு இயற்கையாகவே கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மை உண்டு. மஞ்சள் நல்ல கிருமி நாசினியும் கூட. உடலில் புண், காயம் இருந்தால் அப்பகுதியில் மஞ்சளைப் பூசினால் சுகமாகும்.

நோய் எதிர்ப்பு ஆற்றல்

மஞ்சளுக்குப் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்துச் செயல்படக்கூடிய தன்மை உள்ளது. ஆகவே, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை இது தூண்டும். தினமும் ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் எடுத்து வெதுவெதுப்பான பாலில் கலந்து ஒரு தம்ளர் குடித்து வந்தால் ஃப்ளூ போன்ற சளி தொல்லைகள் அணுகாது.

ஈரலுக்கு நல்லது

ஈரலில் உள்ள இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உண்டு. நச்சுப்பொருள்களை அகற்றி இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதன் மூலம் மஞ்சள் ஈரலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

More News >>