அண்ணனின் குழந்தைக்காக ₹10 லட்சத்தில் வெள்ளி தொட்டில் மேக்னா ராஜுக்கு துருவாவின் சர்ப்ரைஸ்

தனது அண்ணன் சிரஞ்சீவி சர்ஜாவின் குழந்தைக்காக துருவா சர்ஜா 10 லட்சத்தில் வெள்ளி தொட்டிலை பரிசாக கொடுத்து மேக்னாராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மற்றும் நடிகை மேக்னா ராஜ் திருமணம் கடந்த 2018ல் நடந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் சிரஞ்சீவி சர்ஜா திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்தார். அப்போது அவரது மனைவி மேக்னாராஜ், 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். சிரஞ்சீவி சர்ஜாவின் இந்த திடீர் மறைவு அவரது மனைவி மேக்னாராஜுக்கு மட்டுமில்லாமல் கன்னட திரையுலகத்திற்கே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது கணவன் இறந்த அதிர்ச்சியில் இருந்து மேக்னாராஜ் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மேக்னாராஜின் பேபி ஷவர் நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடத்தப்பட்டது.

கொரோனா காலம் என்பதால் அந்த நிகழ்ச்சியில் மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அந்த பேபி ஷவர் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வைரலாக பரவியது. அந்த நிகழ்ச்சியின் போது சிரஞ்சீவி சர்ஜாவின் ஆள் உயர கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது. அந்த கட் அவுட்டின் அருகே வைத்துத் தான் 7 மாத கர்ப்பிணியான மேக்னாராஜுக்கு அனைவரும் ஆசி வழங்கினர். இந்நிலையில் பிறக்கப்போகும் தனது அண்ணனின் குழந்தைக்காக தம்பியும், நடிகருமான துருவா சர்ஜா 10 லட்சத்தில் வெள்ளித் தொட்டில் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். நேற்று அவர், மேக்னாராஜின் வீட்டுக்கு சென்று அந்த பரிசை சர்ப்ரைஸாக வழங்கினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

More News >>