பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்க, நிறுத்த அண்ணா பல்கலைக்கு அதிகாரம் உண்டு : உயர் நீதிமன்றம் உத்தரவு...!

பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்க, இணைப்பை நிறுத்தி வைக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உண்டு எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு தனியார் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் நிறுத்தி வைத்தது. போதுமான ஆசிரியர்கள். வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் இத்தனை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

இதனால், நடப்பாண்டில் அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் அண்ணா பல்கலைக்கழக உத்தரவை எதிர்த்து, இரு தனியார் கல்லூரிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கு விசாரணையின்போது, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்கழகம் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

எனினும், அண்ணா பல்கலைக்கழக விதிகள், அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டது எனக் கூறி, பல்கலைக்கழக உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழகம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழக இணைப்பு மீது நடவடிக்கை எடுக்க அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகக் கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும் சட்டப்படி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் விதிகளின்படி, தரமான கல்வியை வழங்கவே இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறிய நீதிபதிகள், இரு கல்லூரிகளின் மனுக்கள் மீது அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, பல்கலைக்கழக இணைப்பு நிறுத்திவைப்பு உத்தரவை அமல்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

More News >>