வெறிகொண்ட வேங்கையாக மாறிய பிரபல நடிகர்.. ராஜமவுலி புதிய பட டீஸர் ரிலீஸ்..

பாகுபலி படத்துக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி 2 வருடமாக புதிய படம் இயக்காமலிருந்தார். பின்னர் கடந்த ஆண்டு தான் இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். இதில் ஹீரோக்களாக ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் நடிக்கின்றனர். இவர்களுடன் அஜய் தேவ்கன், அலியாபட், ஒலிவியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கிறார். இப்படம் இந்திய சுதந்திரத்துக்காக போராடிய 2 சுதந்திர வீரர்களின் உண்மை கதையாக உருவாவதாக முதலில் கூறப்பட்டது. அதன்படியே படப்பிடிப்பும் தொடங்கியது. இதற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட இரண்டு பேரின் கதை என்று கூறப்பட்ட நிலையில் சம்பந்தப்படவர்கள் குடும்பத்தினர் மற்றும் வாரிசுகள் தரப்பில் ஆந்திர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இறுதியில் இது உண்மைக் கதை இல்லை கற்பனை கதை தான் என ராஜமவுலி தரப்பில் கூறப்பட்டதையடுத்து விவகாரம் முடிவுக்கு வந்தது.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டது. ராஜமவுலிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்த ராஜமவுலி மீண்டும் படப்பிடிப்பு பணிகளையும் படத்தின் டீஸர் வெளியிடும் பணிகளிலும் கவனம் செலுத்தினார். படத்துக்கு ஆர் ஆர் ஆர் என தலைப்புக்கு வைக்கப்பட்ட நிலையில் அதற்கு என்ன அர்த்தம் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர் அந்த சந்தேகத்தை ராஜமவுலி தீர்த்திருக்கிறார் ராம ராஜூ ஃபார் பீம் என டைட்டிலுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகிறது.

ஆர் ஆர் ஆர் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. ஜூனியர் என் டி ஆர் நடித்திருக்கும் சில காட்சிகள் டீஸரில் இடம் பெற்றுள்ளது. வெறி கொண்ட வேங்கையாக அவர் ரத்தம் சொட்ட சொட்ட காட்டுப் பகுதியில் எதிரியை வேட்டையாடும் காட்சி அமைதியான காட்டுப்பகுதியையே மிரட்சியாக மாற்றிவிடுகிறது. இந்த டீஸருக்கு ராம் சரண் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். உலகம் முழுவதும் டீஸர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

More News >>