இந்தியாவில் முதல் முறையாக 5 ஜி சோதனையில் ஜியோ வெற்றி...!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டி உள்ளது. இதன் மூலம் ஜியோ 5ஜி சேவையில் இறங்க முடிவு செய்தது. இதற்கான. தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியிலும் ஜியோ நிறுவனம் ஈடுபட்டு வந்தது.

5ஜி சேவைக்காக குவால்கம் என்ற நிறுவனத்துடன் பிரத்தியேகமாகக் கூட்டணி சேர்ந்து ஜியோ செய்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தின் வாயிலாகக் குவால்கம் 5G RAN என்ற தளத்தின் உதவியுடன் சுமார் 1 ஜிபிபிஎஸ் வேகத்தை ஜியோ பெற்றுள்ளது.

இந்திய டெலிகாம் சந்தையில் முதல் ஆளாக 5ஜி அலைவரிசை சோதனையில் வெற்றி கண்டுள்ளது ஜியோ.இதுவரை இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய இந்த நிறுவனமும் முன்வரவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட ஜியோ 5ஜி சோதனையில் களமிறங்கி வெற்றியும் பெற்றுவிட்டது. இதன் மூலம் இந்தியாவில் முதல் முறையாக 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் நிறுவனம் என்ற பெருமையைப் பெற உள்ளது.இதனால் ஜியோவின் 40 கோடி வாடிக்கையாளர்களும் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

ஜியோவின் 5ஜி சேவைகள் அனைத்தும் ஜியோ இன்போகாம் சொந்தமாக உருவாக்கிய தொழில்நுட்பத்தின் மூலம் அளிக்கப்படும் என்பதால் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வெற்றிக்கு முன்னோட்டமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் கூகிள் நிறுவனம் தனது டிஜிட்டல் தளத்தை மேம்படுத்தப் பல பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஜியோவின் 5ஜி சேவை மக்களுக்குப் பெரிய அளவில் உதவும்.

உலகில் அமெரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, சுவிஸ் ஜெர்மனி ஆகிய சில நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் 5ஜி சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது. இதன் மூலம் 5ஜி சார்ந்த கருவிகள் மற்றும் உபகரணங்களின் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த ஆண்டு மத்திய அரசு 5 ஜி அலைக்கற்றை யை ஏலத்தில் விட உள்ளது. அதே நேரத்தில் ஜியோவும் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய ஆயத்தமாக உள்ளது.அதே சமயம் இந்தியாவில் புதிதாகக் கடை விரித்திருக்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் 5 ஜி ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளது.

இதனால் ஏற்றுமதி வாய்ப்புகள் மட்டுமல்லாது அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது சாத்தியமாகும் பட்சத்தில் சீனாவில் இருந்து ஸ்மார்ட் போன்கள் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.

More News >>