மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடுக்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27ந்தேதி தொடங்குகிறது...!

எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 27 ம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 15 சதவீத எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான ஒதுக்கீட்டின் படி தமிழகத்தில் 547 எம்பிபிஎஸ் இடங்களும், 15 பல மருத்துவ இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை வரும் 27ந்தேதி தொடங்குகிறது.

இந்த கலந்தாய்வு www.mcc.nic.in என்ற இணையதளம் மூலம் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) ஆன்லைனில் நடத்த உள்ளது.வரும் 27-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி மாலை 5 மணி வரை நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் முதல்கட்ட கலந்தாய்விற்குப் பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் தாங்கள் சேர விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்து அதனை நவம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் தரவரிசை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த விவரங்கள் நவம்பர் 5ம் தேதி வெளியிடப்படும். அதனையடுத்து நவம்பர் 6-ம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் கலந்தாய்வில் இடங்களைப் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வுக்காக நவம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்றால், மருத்துவம் பயிலும் வகையில், 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்துக்கு கவர்னர் பன்வாரிலால் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. எனவே, கவர்னர் ஒப்புதல் தரும் வரை தமிழக மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு நடைபெறாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

More News >>