எனது 40 நிமிட உரையை கேளுங்கள்.. பெண்கள் குறித்த சர்ச்சைக்கு திருமாவளவன்!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சனாதன தர்மம் குறித்து பேசியவர், ``சனாதன கொள்கைகளில், பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது பிராமணப் பெண்களுக்கும், சாதாரண அடிமட்டப்பெண்களுக்கும் பொறுந்தும். எல்லாப்பெண்களுக்கும் தீட்டு உண்டு" என்று பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையே, ``எனது பேச்சை திரித்து, பொய்யைப் பரப்புகிறது ஒரு கும்பல். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது அவதூறு பரப்புகிறார்கள். காலங்காலமாக பெண்களை இழிவுபடுத்துவது மனுதர்மம் என்னும் சனாதனமே" என்று விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், மனுதர்மத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன், போராட்டத்தை அறிவித்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதன்படி, இந்த போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருமாவளவன் தலைமையில் நடந்தது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ``பெரியார் பற்றிய இணையவழி கருத்தரங்கில் நான் பேசிய 40 நிமிட உரையை பெண்கள் அனைவரும் கேட்க வேண்டும். நான் பேசியதை சிலர் வேண்டுமென்றே துண்டித்து வெளியிட்டுள்ளனர். பெண்களை இழிவுபடுத்துகிறோம் என்று சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். அதேநேரம் இந்த ஆர்ப்பாட்டம் என் மீதான பழியை துடைப்பதற்காக இல்லை. இது பெண்கள் மீதான இழிவை துடைக்கும் போராட்டம்.

மனுதர்ம சாஸ்திரத்தை பெரியார், அம்பேத்கர் ஏற்கனவே பொது வெளியில் வைத்து எரித்துள்ளனர். அவர்கள் வழியில் மனுதர்ம நூலை தடை செய்யக் கோரி இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

More News >>