சுற்றுலா பயணிகள் கண் முன் மிருகக்காட்சி.. சாலை ஊழியரை அடித்துக் கொன்ற கரடிகள்.

சீனாவில் வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு மிருகக்காட்சி சாலை ஊழியரை கரடிக் கூட்டம் அடித்துக் கொன்று சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவிலுள்ள ஷாங்காயில் பிரசித்திபெற்ற வைல்ட் பீஸ்ட் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. சுமார் 374 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த வனவிலங்கு சரணாலயத்தில் 200க்கும் மேற்பட்ட வகைகளை சேர்ந்த 1 லட்சத்திற்கும் அதிகமான வனவிலங்குகள் உள்ளன. தினமும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்ப்பதற்காக செல்கின்றனர். இது திறந்தவெளி மிருகக்காட்சி சாலை என்பதால் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் மட்டுமே அழைத்துச் செல்லப்படுவார்கள்.இந்நிலையில் நேற்று வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் இந்த சரணாலயத்தில் குவிந்திருந்தனர். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு மிருகக்காட்சி சாலை ஊழியரை திடீரென வந்த கரடிக்கூட்டம் சுற்றி வளைத்து தாக்கியது.

நேரம் செல்ல செல்ல கரடிகள் கூட்டம் அதிகரித்தது. இதை அப்பகுதியில் வாகனத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்திலேயே அந்த கரடிக் கூட்டம் ஊழியரை கொன்றது. பின்னர் அந்த கரடிகள் உடலை சாப்பிட்டதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கரடிகளின் தாக்குதலில் தங்களது ஊழியர் ஒருவர் பலியானதாக மிருகக்காட்சி சாலை நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால் மரணமடைந்தவரின் பெயர், விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தில் மிகுந்த வேதனை அடைந்திருப்பதாக வனவிலங்கு சரணாலயத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துவதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>