அவரின் ரெக்கார்டை பாருங்கள் கொஞ்சம்... பிசிசிஐ நிர்வாகிகளுக்கு எதிராக சீறும் ஹர்பஜன்!

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் 27 முதல் ஜனவரி 19 ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. தலா 3 டி20, ஒருநாள் போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் நடக்க இருக்கின்றன. இதற்கான அணியை நேற்று பிசிசிஐ அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கூடி தேர்வு செய்தனர். அதன்படி, இந்திய அணியில் ஐபிஎல் களத்தில் சாதித்த பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் நடப்பு ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடியதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேநேரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்ய குமார் யாதவ் இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் காயத்தால் இடம்பெறாத போதும் அவருக்குப் பதிலாக சூர்ய குமார் யாதவ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் அதற்கேற்ப தனது திறமையை ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து இருந்தார் சூர்ய குமார் யாதவ். ஐபிஎல் மட்டுமல்ல ரஞ்சி சீசனிலும் சிறப்பாகவே ஆடி இருந்தார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அவர் அணியில் இடம்பெறாதது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் காட்டமாக பிசிசிஐ அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். அதில், ``இந்திய அணியில் இடம்பெற இன்னும் சூர்ய குமார் யாதவ் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ரஞ்சி தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார் சூர்ய குமார் யாதவ். பிசிசிஐ தேர்வாளர்கள் அவரின் ரெக்கார்டுகளை கொஞ்சம் பாருங்கள்" எனக் கூறியுள்ளார்.

More News >>