ஆனியன் கொடுத்தால் அசைவ சாப்பாடு ப்ரீ..

புதுச்சேரி கரிக்கலாம் பாக்கத்தைச் சேர்ந்த நிரூபன் என்ற இளைஞர் நோணாங்குப்பம் படகுத்துறை அருகே ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் சாப்பிட வருபவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்குப் பிரியாணி, காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 வகை அசைவ விருந்து இலவசமாக வழங்கப்படும்.

மாமியார் – மருமகள் ஒன்றாக வந்து சாப்பிட்டால் அவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி. அதையே அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுச் சாப்பிட்டால் அவர்கள் இருவருக்கும் உணவு முற்றிலும் இலவசம்.இப்படி அதிரடி நூதன அறிவிப்புகளால் பெயர் பெற்றிருக்கிறது ஜல்லிக்கட்டு ஓட்டல்.

இந்தப் பட்டியலில் லேட்டஸ்ட்டாக இடம் பெற்றிருப்பது ஒரு கிலோ வெங்காயம் கொண்டு வந்தால் அசைவ உணவு இலவசம் என்பது தான்.இந்த ஹோட்டலில் அசைவ சாப்பாடு விலை நூறு ரூபாய். மீன்குழப்பு, சிக்கன் குழப்பு, மட்டன் குழப்பு, ஆம்லெட், காய்கறி கூட்டு, இனிப்பு, ரசம், மோருடன் ஆகியவை இந்த லிஸ்டில் உண்டு.

தற்போது வெங்காய விலை அதிகரித்துக் கொண்டே போவதால் ஒரு கிலோ வெங்காயத்தை வாங்கி வந்தால் இந்த அசைவ சாப்பாடு இலவசமாகச் சாப்பிடலாம் என அறிவித்திருக்கிறார்கள்.100 திருக்குறளை ஒப்பித்து இதுவரை நான்கு பேர் மட்டுமே இலவசமாகச் சாப்பிட்டுள்ளனர். மாமியார்-மருமகள் கான்செப்ட் இன்னும் செயலுக்கு வரவே இல்லை. அதேசமயம் வெங்காய சலுகை ஓரளவுக்குக் கிளிக்காகியிருக்கிறதாம்.

More News >>