கொரோனா கால முன்பதிவு டிக்கெட் மூலம் மீண்டும் தரிசனம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு...!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் கோயிலில் நடைபெறும் நித்ய பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது.இந்த கால கட்டத்தில் ஆன்லைன், அஞ்சலகம், இ தரிசன கவுண்டர்கள் மூலம் 300 ரூபாய் சிறப்புத் தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகள், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் முன்பதிவு செய்த பக்தர்களுக்குத் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

இந்த டிக்கெட்களை பக்தர்கள் ரத்து செய்து கொண்டால் முன்பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்தது. இதற்காக அக்டோபர் 30 வரை கால அவகாசம் இருந்த நிலையில் தற்போது டிசம்பர் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே , இணையதளத்தின் மூலமாக டிக்கெட் ரத்து செய்யும் பக்தர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்பட்டு வருகிறது.

டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பாத பக்தர்கள் அந்த டிக்கெட் மூலம் எப்போது வேண்டுமென்றாலும் ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம் எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான திருப்பதி ஏழுமலையான் கோவில் டைரி மற்றும் காலண்டர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் வசதியும் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்பதிவு செய்யும் அன்பர்களுக்கு டைரி, காலண்டர்கள் தபால் மூலமாக அவர்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

More News >>