`கணக்கு பாக்கி இருக்கு! உலகக் கோப்பையை குறிவைக்கும் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, `இந்த ஆண்டு நடக்கவுள்ள கால்பந்து உலகக் கோப்பையில் நாங்கள் முடிக்க வேண்டிய கணக்கு ஒன்று பாக்கி இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இந்த ஆண்டு, ஜூன் மாதம் காலபந்து உலகக் கோப்பை தொடங்க உள்ளது. உலகின் பல முன்னணி நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் வெற்றி பெறுவது பல நாடுகளின் கனவு. ஆனால் அர்ஜென்டினா, மாரடோனா தலைமையில் 1986-ம் ஆண்டு கடைசியாக கோப்பையை வென்றது.

அதன் பிறகு அந்த அணிக்கும் கோப்பையை வெல்வது வெறும் கனவாக மட்டுமே இருக்கிறது. குறிப்பாக உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்று புகழப்படும் மெஸ்ஸி இருக்கும் அணி பல ஆண்டுகளாக முயன்றும் இன்னும் கோப்பையை தன் வசம் ஆக்கவில்லை என்ற கடுப்பு கால்பந்து ரசிகர்கள் பலருக்கும் இருக்கும் ஆதங்கம். இந்த ஆதங்கம் மெஸ்ஸிக்கும் இருக்கவே செய்கிறது.

இது குறித்து அவர், `இதுவரை எங்கள் முழு திறனையும் ஒவ்வொரு பெரிய தொடரிலும் வெளிகாட்டியுள்ளோம். இருப்பினும் கோப்பையை கைப்பற்றும் கடைசி படியில் மட்டும் மூன்று முறை சறுக்கியுள்ளோம். எனவே, கோப்பையை வென்று மற்றவர்களுக்கு நாங்கள் சில விஷயத்தை நிரூபிக்க வேண்டும் என்பதைவிட, நாங்கள் எங்களுக்கே சில விஷயத்தை நிரூபித்துக் காட்ட வேண்டியுள்ளது.

கண்டிப்பாக இந்த முறை உலகக் கோப்பையில் நாங்கள் முடிக்க வேண்டிய கணக்கு ஒன்று பாக்கியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். 2014-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>