இரு சோஷலிச நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு... கலக்கத்துடன் உற்று நோக்கும் மேற்குலகு!

அணு ஆயுத சோதனையை கைவிடுவதாக சோஷலிச நாடான வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் கூறியதாக சீன சோஷலிசக் குடியரசு தெரிவித்துள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு அணு ஆயுத சோதனை நடத்தி வருகின்றது. தங்கள் நாட்டை அழிக்க நினைக்கும் எதிரிகளிடம் இருந்து தாய் நாட்டைக் காக்க கண்டம் விட்டு கண்டம் செல்லும் திறன் படைத்த ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகின்றது.

இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சோஷலிச நாடான சீனாவுக்கு 4 நான் சுற்று பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை, கிம் சந்தித்து பேசியுள்ளார்.

வடகொரியாவில் அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவது என்ற முடிவை மேற்கொள்ள இருப்பதாக கிம் ஜாங் உன் சீன அதிபர் ஜின்பிங்கிடம் உறுதியளித்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, இரு நாடுகளுக்கும் இடையே மாநாட்டு கூட்டம் நடத்துவது ஆகியவற்றை மேற்கொள்ள வடகொரியா தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்களின் நல்லெண்ண முயற்சி, அமைதி ஆகியவற்றுக்கான இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் செயல்பட்டால் அணு ஆயுத விவகாரம் தீர்க்கப்படும் என்று வடகொரிய அதிபர் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

வடகொரிய அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இரண்டு சோஷலிச நாட்டுத் தலைவர்கள் சந்தித்த இந்த நிகழ்வை ஏகாதிபத்திய மேற்கத்திய நாடுகள் மிகுந்த கலக்கத்துடன் பார்த்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>